Last Updated : 25 Aug, 2020 05:01 PM

 

Published : 25 Aug 2020 05:01 PM
Last Updated : 25 Aug 2020 05:01 PM

புதுச்சேரி சட்டக் கல்லூரிக்கு செப்டம்பரில் தேர்வு: முடிவைக் கைவிடக் கோரி ஏராளமான மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை

புதுச்சேரி

புதுச்சேரி சட்டக் கல்லூரியில் தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடக் கோரி ஏராளமான பெற்றோர், மாணவர்கள் முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று புதுச்சேரியில் வேகமாகப் பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை சட்டக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக் கட்டணத்தை செப்டம்பர் 9-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஹால் டிக்கெட் விநியோகம் செப்டம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கும். செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதிக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுத் தேதியை அறிவித்துள்ளது. இது நோய்த் தொற்று வேகமாகப் பரவவே வழிவகுக்கும்.

மேலும், புதுச்சேரி சட்டக் கல்லூரியில் காரைக்கால், மாஹே, அந்தமான், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பொதுப் போக்குவரத்து சீராகாத சூழலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு அறிவித்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்காத சூழலில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக்தின் அறிவிப்பு பாதகமான சூழலை உருவாக்கும்" என்று குறிப்பிட்டார்.

இச்சூழலில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு அட்டவணையைத் திரும்பப் பெறவும், இறுதி ஆண்டைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி செய்யவும் புதுச்சேரி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு மாணவர்களும், பெற்றோரும் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். இதன் நகலைத் துணைவேந்தர், கல்வியமைச்சர் ஆகியோருக்கும் இணைத்துள்ளதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x