Published : 25 Aug 2020 03:43 PM
Last Updated : 25 Aug 2020 03:43 PM

கிருஷ்ணகிரி அருகே 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இன்று பரிசாக வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு (2019- 2020) ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்புக்குச் செல்ல மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் கடந்த ஆண்டுகளில் இம்மாணவர்கள் கல்வி மற்றும் கூடுதல் கலைத் திறன்களான இசை, நடனம், பாடல், பேச்சு, பள்ளி வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கரோனா விடுமுறையில் இணைய வழிக் (வாட்ஸ் அப், யுடியூப்) கற்றலில் சிறப்பாக மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்ற மாணவர்கள் வினிஷ், பூவாஷ் , அசரப், சாஜினா, சுமையா மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளராகத் (தலைவராக) திறம்படச் செயல்பட்ட மாணவர் வினிஷ், ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளும், ஷீல்டுகளும் வழங்கப்பட்டன.

ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அம்மரக்கன்றுகள் அனைத்தும் அவர்கள் நினைவாகப் பள்ளி வளாகத்திலேயே நடப்பட்டன. ஏற்கனவே பயின்ற மாணவர்களுக்கும் இந்த கல்வி ஆண்டில் புதியதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் பேனா, நோட்டுகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் நன்கு படிக்கச் சிறப்பாக ஒத்துழைத்து வரும் பெற்றோர்களுக்குப் பாராட்டுரை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர்ப் பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஜீவா, பெ.ஆ.க.ஆசிரியர்கள் சுபா,ரோசினி ஆகியோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சி வீரமணி நிகழ்வை ஒருங்கிணைத்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x