Last Updated : 25 Aug, 2020 01:43 PM

 

Published : 25 Aug 2020 01:43 PM
Last Updated : 25 Aug 2020 01:43 PM

ஸ்மார்ட்போன் இல்லாவிட்டால் என்ன?- வீட்டுச் சுவர்களில் ஏழை மாணவர்களுக்குப் பாடம்: சோலாபூரில் அசத்தும் பள்ளி

பிரதிநிதித்துவப் படம்.

சோலாபூர்

ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத ஏழை மாணவர்களுக்காக வீட்டுச் சுவர்களில் பாடத்தை எழுதி சோலாபூரில் உள்ள பள்ளி, புதுமையான முறையில் கற்பித்து வருகிறது.

மகாராஷ்டிராவின் சோலாபூர் நகரத்தில் நிலம்பூர் பகுதியில் ஆஷா மராத்தி வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் தினக் கூலித் தொழிலாளர்களாக, ஜவுளித் துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நிலம்பூரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளிப்புறச் சுவர்களில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.

1 முதல் 10-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்குப் பாடங்கள் எளிமையாக, அதே சமயம் சுவாரசியமான முறையில் வரையப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராம் கெய்க்வாட், ''எங்கள் பள்ளியில் சுமார் 1,700 மாணவர்கள் படிக்கின்றனர். கரோனா சூழலில் ஆன்லைன் கல்வி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் உள்ள மாணவர்களுக்காக இணைய வழியில் கற்பித்து வருகிறோம்.

ஆன்லைன் சாதனங்கள் இல்லாத ஒரே காரணத்துக்காக மாணவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது. இதனால் வீட்டுச் சுவர்களின் பாடங்களை வரைய முடிவு செய்தோம். இதன்படி நிலம்பூரில் 300-க்கும் மேற்பட்ட வீட்டுச் சுவர்களில் பாடங்கள் வரையப்பட்டுள்ளன. இதைக் கொண்டு மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிப் பாடங்களைப் படிக்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் வந்து வாசிக்கலாம்.

வீட்டுச் சுவர்களில் எழுத்துகள், எண்கள், சொற்கள், வாக்கிய உருவாக்கம், இலக்கணம், கணித சூத்திரங்கள், பொது அறிவு மற்றும் பல்வேறு பாடங்கள் எழுதப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x