Published : 25 Aug 2020 08:41 AM
Last Updated : 25 Aug 2020 08:41 AM

கரோனா பாதிப்பால் பெற்றோருக்கு வருவாய் இழப்பு: தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறும் மாணவர்கள்

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்காக மாணவியர் தங்கள் பெற்றோருடன் காத்திருந்தனர்.

ஈரோடு

கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகளால், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 17-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு, 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று முதல் பிளஸ் 1 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைப் பயின்ற குழந்தைகள் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலும் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

இந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1769 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று பிளஸ் 1 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. கடந்தாண்டு தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்ற ஏராளமான மாணவ, மாணவியர் பிளஸ் 1 படிக்க அரசுப் பள்ளிகளையே தேர்வு செய்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால் வருவாய் இழந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர், தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் கட்ட முடியாமல், அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலனி, சைக்கிள், மடிக்கணினி, பஸ் பாஸ் என பல்வேறு சலுகைகள் இலவசமாக கிடைப்பதும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்து இருப்பதாலும், பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகளின் மீது திரும்பியுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் பாடப்பிரிவுகள், வகுப்புகளை தொடங்க வேண்டிய நிலை அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x