Last Updated : 21 Aug, 2020 11:44 AM

 

Published : 21 Aug 2020 11:44 AM
Last Updated : 21 Aug 2020 11:44 AM

அமைப்புகளின் கதை 2: தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்

கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக நீங்கள் காத்திருக்கும் காலம் இது. நீங்கள் சேர விரும்பும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் இணைய தளங்களைச் சென்று பார்த்திருக்கிறீர்களா? அதில் ‘ஏ + கிரேடு’, ‘ஏ கிரேடு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு இந்த கிரேடு எப்படிக் கிடைக்கிறது?

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குத் தர மதிப்பீடு வழங்கும் அமைப்பின் பெயர், ‘நாக்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்’ (National Assessment and Accreditation Council). நாக் அமைப்பு என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) நிதி உதவியுடன் செயல்படும் தன்னாட்சி அமைப்பு. இப்போது புதிய தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டதைப் போல, 1986-ம் ஆண்டிலும் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அதில், உயர் கல்வியின் தரக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி பல்கலைக்கழங்கள், கல்லூரிகளைத் தர மதிப்பீடு செய்ய முடிவானது.

அந்தப் பணியை மேற்கொள்ள 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்புதான் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்). இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. 94-ம் ஆண்டில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து ‘நாக்’ சான்றிதழ் வழங்கத் தொடங்கியது. ஆனால், அதெல்லாம் அந்தக் கல்வி நிறுவனங்கள் தாமாக முன் வந்து தர மதிப்பீட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும் வகையில்தான் இருந்தது. 2010-ம் ஆண்டு வரை இப்படியே நீடித்தது.

அதன் பிறகுதான் உயர் கல்வி நிறுவனங்கள் தர மதிப்பீடு பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஒவ்வோர் உயர் கல்வி நிறுவனமும் ‘நாக்’ மதிப்பீட்டுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு வருகின்றன. இந்த மதிப்பீட்டைப் பெறுவதற்கு ‘நாக்’ அமைப்பிடம் உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகம், பாடத் திட்டம், கற்பித்தல், கற்றலின் நிலை, பணியாற்றும் பேராசிரியர்கள், அங்கே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் எனப் பல்வேறு நிலைகளில் ‘நாக்’ அமைப்பு ஆராயும். இதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ ++’, ‘ஏ+’, ‘ஏ; ‘பி++’ ‘பி+’, ‘பி’, ‘சி’, ‘டி’ என ஆறு நிலைகளில் மதிப்பீடுகள் வழங்கப்படும்.

இத்தரத்தின் அடிப்படையில் கல்லூரியின் தரத்தை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்துகொள்ள முடியும். இதற்கென www.naac.gov.in/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மதிப்பீடு வழங்க அந்த அமைப்பு எடுத்துக்கொள்ளும் அளவீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு வசதியில்லை, சரியில்லை என்று சொல்லி வருத்தப்படுவதற்கு முன்பு, நீங்கள் சேர விரும்பும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு ‘நாக்’ அமைப்பு என்ன மதிப்பீடு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் என்ன வசதிகள் உள்ளன போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த மதிப்பீடு உதவுகிறது.

உயர் கல்வியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் அறிந்துகொள்ள வேண்டிய அமைப்பு இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x