Published : 18 Aug 2020 07:29 PM
Last Updated : 18 Aug 2020 07:29 PM
தமிழகத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியநிலையில், அரசு கல்லூரிகளில் சேர்க்கை தொடங்காததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பிளஸ் 2 முடித்தோர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தாண்டு கரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை தமிழக அரசு ரத்து செய்தது.
தொடர்ந்து ஆன்லைனில் ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஆக.10-ம் தேதி பதிவேற்றம் செய்யலாம். ஒருவர் எந்த கல்லூரிக்கும், பாடப்பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 109 கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்தனர். மேலும் ‘பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
தற்போது தனியார் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் அரசு கல்லூரிகளில் சேர்க்கை தொடங்காமல் இழுபறியாக உள்ளது.
இதனால் அரசு கல்லூரிகளில் தங்களுக்கு இடம் கிடைக்குமா? (அ) தனியார் கல்லூரிகளில் சேருவதா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
சிலர் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT