Published : 15 Aug 2020 11:24 AM
Last Updated : 15 Aug 2020 11:24 AM

தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் குருமூர்த்திக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து

அனைத்து ஆசிரியர்களுக்கும் நீங்கள் உத்வேகம் அளிப்பவர் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்திக்கு, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி தினசரி 12 மணி நேரம் கணினியில் அமர்ந்து 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தையும் வரிகூட விடாமல், வீடியோவாக்கி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறார். இதுதவிர்த்து www.guruedits.blogspot.com என்ற வலைப்பூவில் அத்தனை வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒவ்வொரு வரியையும் வீடியோவாகத் தொகுத்தவர், ஒவ்வொரு பாடத்தையும் 2 அல்லது 3 பாகங்களாகப் பிரித்து உருவாக்கியுள்ளார். ஒரு பாடத்தை வீடியோவாக உருவாக்க சுமார் 50 மணி நேரம் ஆகியுள்ளது. பாடத்துகெனப் பொதுவாகக் காணொலி தயாரித்தால் எளிதாக முடித்துவிடலாம். ஆனால், இதில் ஒவ்வொரு வரிக்கும் வீடியோ இருக்கும்.

இதுகுறித்து இந்து தமிழ் இணையத்தில், தினசரி 12 மணிநேர உழைப்பு: 5-ம் வகுப்புப் பாடங்களை வீடியோவாக்கி மாணவர்களுக்கு அனுப்பும் ஆசிரியர்! என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஆசிரியர் குருமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''42 வயதாக ஆசிரியர் குருமூர்த்தி திருச்சி, தொட்டியம் அருகே எம்.களத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

ஆன்லைன் வழியில் தனது மாணவர்களுக்கு வீடியோக்களை உருவாக்கிக் கற்பித்து வருகிறார். அனைத்து ஆசிரியர்களுக்கும் நீங்கள் உத்வேகம் அளிப்பவர்'' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x