Published : 14 Aug 2020 04:12 PM
Last Updated : 14 Aug 2020 04:12 PM
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி யூதிஷா 3 நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை அரசு மேல்நிலைp பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி யூதிஷா (13). திருக்குறளை மனப்பாடமாக அதிவேகமாகச் சொல்லும் திறமை பெற்ற இவர் 5 நிமிடத்தில் 230 திருக்குறளை ஒப்புவிப்பதான முயற்சி எடுத்து வந்த நிலையில் அதற்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டிக்கான ஏற்பாடு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் முன்னிலையில் உலக சாதனைக்காக அதிவேகமாக திருக்குறளை ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவி யூதிஷா நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களுக்கு முன்பாகவே, அதாவது 3 நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து ட்ரரையம்ப் உலக சாதனை படைத்தார். ட்ரையம்ப் உலக சாதனை ஆய்வு மையத்தின் தென்மண்டல நடுவர் சம்பத்குமார் இந்நிகழ்வை பதிவு செய்தார்.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அன்று சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் மடத்துப்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரிணி 5 நிமிடங்கள் 39 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்து ட்ரம்ப் உலக சாதனை புரிந்திருந்தார். அதன் பின்னர் இச்சாதனையை தற்போது மாணவி யூதிஷா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை புரிந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து
கொடுத்ததற்காக மாணவியின் பெற்றோர் கண்ணன், சாந்தி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT