Published : 13 Aug 2020 04:44 PM
Last Updated : 13 Aug 2020 04:44 PM
ஊரடங்கு நேரத்தில் அரசு விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் இயங்கும் பள்ளியொன்று மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் மெதினிபூர் மாவட்டத்தில் தாஸ்பூர் பகுதி உள்ளது. அங்கே ஹேட்ஸர்பரியா பிசி ராய் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கரோனா கால அரசு விதிமுறைகளை மீறி கடந்த புதன்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பிருந்தாவன் கட்டக் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
அதேபோல் ஏராளமான பெற்றோர்களும் மீண்டும் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். தனிமனித இடைவெளி மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றியே வகுப்புகளைத் தொடங்கினோம். இத்தனை மாதங்களாக வீட்டிலேயே இருந்துவிட்டு பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் ஆர்வமுடன் காணப்பட்டனர்.
அதேபோல 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும் உரிய விதிமுறைகளின்படி வகுப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
எனினும், அரசு விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து 24 மணி நேரத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT