Last Updated : 12 Aug, 2020 12:39 PM

1  

Published : 12 Aug 2020 12:39 PM
Last Updated : 12 Aug 2020 12:39 PM

அமைப்புகளின் கதை 1: யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலம் இது. நாடு முழுவதும் கல்லூரிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக அந்தந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு எது தெரியுமா? அதுதான் பல்கலைக்கழக மானியக் குழு!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள ‘யுஜிசி’ எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரசியமானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழங்கள் இடையே செயல்பாடுகளை அதிகரிக்கவும் தகவல் பரிமாற்றங்களுக்காகவும் 1925-ல் பல்கலைக்கழக வாரியம் என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதை ‘இண்டர் யுனிவர்சிட்டி போர்டு’ என்று அழைத்தார்கள்.

இதேபோல 1944-ம் ஆண்டில் கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனை வாரியம் ‘சார்ஜியன்ட் அறிக்கை’ ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி 1945-ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்த அலிகர், பனாரஸ், டெல்லி ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிடத் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புதான் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி).

சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் இதர பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட யுஜிசியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன்பிறகு 1948-ம் ஆண்டில் இந்த அமைப்பு மறு நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இருப்பதுபோலவே இந்த அமைப்பு அதிகாரங்கள், உறுப்பினர்களுடன் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்த அமைப்பின் முதல் தலைவராக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

1952-ம் ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவிகள் இனி யுஜிசி மூலமே வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகவே 1956-ல் நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படிச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பிலேயே மிகப் பெரியது. மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. புனே, போபால், கொல்கத்தா, ஹைதராபாத், குவஹாட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை இந்த அமைப்பின் முதன்மைப் பணிகள் ஆகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே யுஜிசி, பாலமாகத் திகழ்கிறது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

இந்த அமைப்புக்கென www.ugc.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் உள்ளது. இந்த இணையத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கான யுஜிசியின் திட்டங்கள், யுஜிசி தொடர்பான முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், யுஜிசியின் அதிகாரங்கள் என அனைத்துத் தகவல்களும் இணையதளத்தில் இடம்பிடித்துள்ளன.

உயர் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x