Last Updated : 12 Aug, 2020 12:13 PM

 

Published : 12 Aug 2020 12:13 PM
Last Updated : 12 Aug 2020 12:13 PM

ரயில்வே பாதுகாப்புப் படையினரின் குறைகளைத் தெரிவிக்க பிரத்யேகச் செயலியை உருவாக்கிய கல்லூரி மாணவர்

தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா காலத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்கள் குறைகளைத் தெரிவிக்க நேரடியாக அலுவலகம் வருவதைத் தவிர்க்கவும், குறைகளுக்கு விரைந்து பதில் கிடைக்கும் நோக்கிலும் பிரத்யேகச் செயலியை (RPF Online Complaint Portal) உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆர்.பி.சரண் தீபக்.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

''சரண் தீபக்கின் தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். செல்போன் செயலிக்கான தேவையை அறிந்த சரண், தாமாக முன்வந்து இலவசமாகச் செயலியை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இந்த செயலி வழியே புகார் தெரிவிக்க உள்நுழைய வேண்டுமெனில் பயனாளரின் பிரத்யேக அடையாள எண் (UIN), செல்போன் எண், பதவியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் விடுப்புக் கோரி விண்ணப்பிப்பது, சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், வேலையில் உள்ள குறைகளை மேலிடம் வரை நேரடியாகத் தெரிவிக்க முடியும்.

குறைகளைத் தெரிவித்தவுடன், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். தெரிவித்த குறைகள் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லும்போதும், இறுதி நடவடிக்கை குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வரும் நாட்களில் பயனாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஏற்று அதற்கேற்றவாறு செயலி மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாணவர் ஆர்.பி.சரண் தீபக் கூறும்போது, "இதற்கு முன்பு ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடிதம் மூலமாக மட்டுமே தங்கள் குறைகள், வேண்டுகோள்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை இருந்தது. செயலி மூலம் வரும் நாட்களில் அந்த சூழலைத் தவிர்க்க முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x