Published : 11 Aug 2020 07:32 PM
Last Updated : 11 Aug 2020 07:32 PM

10-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள் விஷயத்தில் முதல்வர் முடிவெடுக்கக் கோரிக்கை 

பெ.மணியரசன்

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின் விஷயத்தில் முதல்வர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''பள்ளிகளில் பயின்று, காலாண்டு, அரையாண்டுத் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கரோனா காரணமாக இறுதித் தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது. இத்தேர்ச்சி முடிவுகள் 10.08.2020 அன்று வெளியிடப்பட்டன. அம்முடிவு வரவேற்கத்தக்கது.

ஆனால், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பை எழுத சுமார் 10 ஆயிரம் மாணவர்கள், தனித்தேர்வர்களாக நேரடியாகத் தேர்வெழுதப் பதிவு செய்து, தங்களுக்குரிய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டைப் பெற்றிருந்த நிலையில் கரோனா காரணமாகத் தேர்வுகளை அரசு நடத்தவில்லை.

இந்தத் தனித்தேர்வர்களுக்குத் தமிழ்நாடு அரசு, தேர்வு வைக்கப் போகிறதா அல்லது வேறு வகையில் தேர்ச்சி வழங்கப் போகிறதா என்ற விவரத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 11-வகுப்பு மாணவர் சேர்க்கை 24.08.2020 அன்று தொடங்கும் என்று இன்று அறிவித்துள்ளார். இந்நலையில், தனித்தேர்வர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் குழம்பத்தில் உள்ளனர். இதுகுறித்துத் தமிழக முதல்வர், தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்''

இவ்வாறு அந்த அறிக்கையில் மணியரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x