Published : 11 Aug 2020 04:46 PM
Last Updated : 11 Aug 2020 04:46 PM

எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேதி நீட்டிப்பு

எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் க.பேபிலதா கூறும்போது, ''எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கு நேரடி 2-ம் ஆண்டு, முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு https://www.tngptc.in அல்லது https://www.tngptc.com என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நேரடி 2-ம் ஆண்டு விண்ணப்பங்களை இணையதள வழியாகச் சமர்ப்பிக்க ஆக.15-ம் தேதி கடைசி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆக.6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். முதலாம் ஆண்டு விண்ணப்பங்களை இணையதள வழியாகச் சமர்ப்பிக்க ஆக.20-ம் தேதி கடைசி நாளாகும். இவர்கள் இணையதள வழியாக ஆக.10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவியர்கள் மாவட்ட சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல், கம்யூட்டர் இன்ஜினியரிங், ஆடை வடிவமைப்பியல் ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணமாக பொது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.150-ஐ நெட் பேங்க்கிங், ஏடிஎம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழியாகச் செலுத்தலாம். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x