Last Updated : 10 Aug, 2020 12:10 PM

 

Published : 10 Aug 2020 12:10 PM
Last Updated : 10 Aug 2020 12:10 PM

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கல்லூரி மாணவர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வெப்பரை பழங்குடியின கிராமத்தில், பள்ளி மாணவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக இலவசமாக கல்வி கற்றுத் தரும் கல்லூரி மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி காளியாபுரம் ஊராட்சியில், பொன்னாலம்மன்துறை, பங்களாமேடு, முதலியார்பதி, காக்காகொத்திபாறை, கே.பி.எம்.காலனி, நரிக்கல்பதி, எட்டித்துறை, ஏ.கே.ஜி.நகர், செல்லப்பிள்ளைகரடு, வெப்பரைப்பதி ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. வெப்பரைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று, கல்வி பயின்று வருகின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த, டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் மாணவர் கனகசபாபதி(21), ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு, தனது வீட்டில் கல்வி கற்பித்து வருகிறார்.

மேலும், மாணவர்களின் பெற்றோர் கொடுக்கும் அரிசி, பருப்பு ஆகியவற்றைக் கொண்டு உணவு தயாரித்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு வழங்குகிறார்.

இதுகுறித்து கனகசபாபதி கூறும்போது, "பழங்குடியின மக்கள் கல்வியறிவு இல்லாததாலும், கூலி வேலைக்குச் செல்வதாலும் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறேன். தினமும் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடத்துகிறேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாணவர் வீட்டிலிருந்தும் ஒரு கைப்பிடி அரிசி கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக உணவு சமைத்துக் கொள்கிறோம்" என்றார். எஸ்.கோபு


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x