Published : 10 Aug 2020 11:00 AM
Last Updated : 10 Aug 2020 11:00 AM

தனித் தேர்வர்களுக்குத் தேர்ச்சி இல்லை; 10-ம் வகுப்புத் தேர்வு நடக்குமா என்று தெரியாமல் தவிப்பு

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தங்களுக்கும் தேர்ச்சி வழங்காமல், தேர்வு நடக்குமா என்பதையும் தேர்வுத் துறை இதுவரை அறிவிக்காததால் தனித்தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9.55 லட்சம் பேர் எழுதவிருந்தனர். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகள் முழுதும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களின் நிலைப்பாடு குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்தது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் அனைத்து மாணவர்களுக்கும்ம் 100 சதவீதத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், 10,742 தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்தோ, மீண்டும் தேர்வு நடத்துவது குறித்தோ எந்த அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் தனித்தேர்வர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தங்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுவதை அரசு உறுதிபடத் தெரிவித்தால் தொடர்ந்து அதற்குத் தயாராக முடியும் என்பதே தனித்தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x