Published : 09 Aug 2020 07:25 AM
Last Updated : 09 Aug 2020 07:25 AM
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த உரிய அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிடாததால் தனித்தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 9.55 லட்சம் பேர் எழுதவிருந்தனர். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகள் முழுதும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து 9.45 லட்சம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவதாகவும் வருகைப்பதிவு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளன. அதேநேரம், தனித் தேர்வர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக தனித்தேர்வர்கள் சிலர் கூறும்போது, "நடப்புஆண்டு தமிழகம் முழுவதும் 10,742 தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களின் நிலைப்பாடு குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்தது. ஆனால், இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுவதை உறுதிபட தெரிவித்தால் தொடர்ந்து அதற்கு தயாராக உதவியாக இருக்கும். மேலும், உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் மீதான பாதிப்பையும் தவிர்க்கலாம்" என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT