Last Updated : 07 Aug, 2020 04:29 PM

 

Published : 07 Aug 2020 04:29 PM
Last Updated : 07 Aug 2020 04:29 PM

தேசிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: புதுவை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி

எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கும் கல்விக் கொள்கை என்பதை உணர்ந்து, மாநில உரிமைகளையும், சமூக நீதியையும் காத்திட, தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கையை புதுச்சேரி அரசு மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் மனு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செங்கதிர், பொருளாளர் ரமேஷ், செயலர் சதீஷ்குமார் ஆகியோர் முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணனுக்கு அளித்த மனு விவரம்:

''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை என்பது அடிப்படையில் சமூக நீதிக்கு எதிரானது. மாநில அரசினுடைய உரிமைக்கு எதிரானது. இதனால் மாநில அரசுகள் கல்வியில் அனைத்து அதிகாரங்களையும் இழக்கும். மத்தியப் பட்டியலுக்கு மாறிய நிலைமை ஏற்படும்.

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்பு நிகழும். மூன்றாவது ஒரு மொழியைக் கட்டாயமாகக் கற்க, குழந்தைகள் பிற பாடங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருவதாக உள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமான உறுதியளிப்பு சட்டமான சமூக நீதி, இட ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்பு 15(4), 16(4), 15(47), 29 போன்ற பிரிவுகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பு உரிமைகளுக்கும் இதில் உத்தரவாதம் இல்லை.

தகுதி, திறமை, பொருளாதார அடிப்படை எல்லாம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக நீதி, இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கோ, பல்கலைக்கழகக் கல்லூரி நியமனங்களுக்கோ எந்தப் பாதுகாப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இளம் மாணவர்களைப் பள்ளியில் இருந்து விலக்கி இடைநிற்றலை ஊக்குவிக்கும் வகையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமைந்துள்ளது.

கலை, அறிவியல் பாடங்களுடன் "தொழில் கல்வி" என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு நிகழும். உயர்கல்வியில் சேர பள்ளிக் கல்வியின் மதிப்பெண்கள் செல்லாது. தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறும்.

அரசுப் பள்ளியில் மாணவர் குறைவு, வசதிப் பற்றாக்குறை இருந்தால் அத்தகைய பள்ளிகள் இணைந்து வளாகப் (Complex) பள்ளிகளாக உருவாகும். வசதி இருப்பவர்கள் அருகிலேயே தனியார் பள்ளியில் படிக்க முடியும். வசதி இல்லாதவர்கள் தொலைதூரம் சென்று அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.

கற்பித்தல் பணிக்கான அரசின் நிதிப் பொறுப்பு வரையறுக்கப்படவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. தேர்வுகளை நடத்த அரசுத் தேர்வு வாரியம் (BOA) அல்லாமல் அரசு ஒப்புதல் தந்த எந்த தனியார் வாரியமும் தேர்வுச் சான்று பெறலாம். இதில் நம்பகத் தன்மையும் நேர்மையும் இல்லாமல் போகும்.

மாநிலத் தேர்வு வாரியமா? மத்தியத் தேர்வு வாரியமா? அல்லது தனியார் தேர்வு வாரியமா? யார் மாணவரின் மதிப்பீட்டுச் சான்று தர வேண்டும் என்பதைப் பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்பது நடுநிலைத்தன்மை அழிந்து போகச் செய்யும் முறையாகும்.

கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் "நிதி உதவி" என்ற பெயரில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணித்தல் நடைபெற வாய்ப்புண்டு. சுமார் 5,000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் அழிக்கப்படும்.

இந்தியா முழுவதற்கும் "ஒரே பாடத்திட்டம்" என்ற பெயரில் தென்னிந்திய நாகரிகம், வரலாற்றைப் புறக்கணிக்கும் முயற்சி மேலோங்கி உள்ளது. எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கும் கல்விக் கொள்கை என்பதை உணர்ந்து, மாநில உரிமைகளையும், சமூக நீதியையும் காத்திட, இந்த தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கையை புதுச்சேரி அரசு மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இதுகுறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஆகியோரிடமிருந்து கூடுதல் தெளிவுகளையும், விமர்சனங்களையும் பெற்று புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x