Published : 07 Aug 2020 01:10 PM
Last Updated : 07 Aug 2020 01:10 PM

பொறியியல் படிப்புகளுக்கு ஆக.12 முதல் ஆன்லைன் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணை வெளியீடு

சென்னை

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அக்டோபர் 26-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தன்னாட்சி பெறாத, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28-ம் தேதி முதல் நடைபெற வேண்டும் என்றும், செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக குறைவான வேலை நாட்களே இருப்பதால், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் உள்ள அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் கல்லூரிகள் இயங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற செமஸ்டர் தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

கல்லூரிகள் இந்த அட்டவணையை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த செமஸ்டர் தேர்வுகளுக்கான வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கல்லூரிகளைத் திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லாததால், மாணவர்களுக்கான வகுப்புகள் இணைய வழியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x