Published : 05 Aug 2020 07:39 AM
Last Updated : 05 Aug 2020 07:39 AM

கல்விக்கட்டண வசூலில் விதிமீறிய தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும்- பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

முழு கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகளின் பட்டியலை வரும் 8-ம் தேதிக்குள் ஒப்படைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூல் செய்யவும் ஒரே தவணையில் 100 சதவீத கட்டணத்தை செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதேநேரம், நீதிமன்ற உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் முழு கட்டணத்தை செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்தித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதுகுறித்த விசாரணையில் கல்விக்கட்டண விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘கல்விக் கட்டணம் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இயக்குநரகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, 100 சதவீத கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகளின் பட்டியல், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x