Published : 01 Aug 2020 02:54 PM
Last Updated : 01 Aug 2020 02:54 PM

மதிய உணவுக்குப் பதிலாக மாணவர்களுக்கு உணவு தானியம், பருப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புதுடெல்லி

கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மதிய உணவுக்குப் பதிலாக மாணவர்களுக்கு உணவு தானியம், பருப்பு உள்ளிட்டவற்றை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் மதிய உணவை நம்பியிருந்த குழந்தைகள் ஊட்டச்சத்தான உணவை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''பள்ளி செல்லும் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பள்ளிகள் மூடப்பட்ட போதிலும் இது முக்கியமானதாகும்.

இதன்படி, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், வழக்கமான நடைமுறை மீண்டும் தொடரும்'' என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கால் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டதால் சத்துணவு அளிக்க முடியாததைத் தொடர்ந்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு என உலர் உணவுப் பொருட்களைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தின் முன்னாடி மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x