Published : 01 Aug 2020 01:05 PM
Last Updated : 01 Aug 2020 01:05 PM
கர்நாடகாவில் இரண்டு வார காலத்துக்குள் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவரான கஸ்தூரிரங்கனுடன் காணொலிக் கருத்தரங்கில் சுரேஷ் குமார் உரையாடினார்.
இது தொடர்பாகப் பேசிய அமைச்சர் சுரேஷ் குமார், ''அனைவருக்கும் தரமான கல்வி மூலம் புதிய கல்விக் கொள்கை நிலையான, உயிர்ப்பான சமூகத்தை உருவாக்கும். இக்கொள்கையை அமல்படுத்துவதில் கர்நாடகா ஆவலாக உள்ளது.
மாநில அரசின் சார்பிலும் கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். இரண்டு வார காலத்துக்குள் இரண்டு கொள்கைகளும் இணைக்கப்பட்டு, கர்நாடகாவுக்கெனத் தனிக் கொள்கை உருவாக்கப்படும். இது ஆகஸ்ட் 20-ம் தேதியில் அமல்படுத்தப்படும்.
5-ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி என்பது சிறப்பானதாகும். 34 ஆண்டுகளுக்குப் பிறகு வருங்காலத்தைத் தயார்படுத்துவதில் கல்விக் கொள்கை முழுமையான ஒன்றாக உள்ளது. இக்கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில், கர்நாடகா முன்னணியில் திகழும்'' என்றார் அமைச்சர் சுரேஷ் குமார்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT