Last Updated : 31 Jul, 2020 02:34 PM

 

Published : 31 Jul 2020 02:34 PM
Last Updated : 31 Jul 2020 02:34 PM

கரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை: பரிதாப நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை வழங்க தமிழக பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய பகுதி நேர ஆசிரியர்கள் அதற்குப் பதிலாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதை வழங்காமல் அதுகுறித்து எதுவுமே அறிவிக்காமல், வழக்கம்போல வழங்க வேண்டிய ஜூலை மாத ஊதியத்தை மட்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடவே, பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களை ஈடுசெய்ய வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நம்மிடம் பேசுகையில், “கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசே பள்ளிகளை மூடி வைத்திருக்கிறது. பொதுமுடக்கக் காலத்திற்கான ஊதியத்தைக் எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், எங்கள் விஷயத்தில் இந்த உத்தரவைத் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்போது எங்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை வழங்க உத்தரவிட்டாலும் ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்ட மே மாதத்திற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை.

தமிழகத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க கடந்த 2011-ல் பேரவை விதி 110-ன் கீழ் உத்தரவு பிறப்பித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து எங்களுக்கு மே மாத ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்போது பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், புதிதாகத் தருவது போல ஜூன், ஜூலை மாத ஊதியம் உண்டு என்றும், அதற்குரிய வேலை நாட்களைப் பள்ளி திறந்ததும் ஈடுசெய்ய வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாகப் பணி புரியும்போது ஒவ்வொரு மாதமும் புதிதாக ஊதியம் வழங்குவது போல் அறிவிப்பு செய்வதால் நீண்டகாலக் கோரிக்கை ஏற்கப்பட்டது போல சித்தரிக்கப்படுகிறது.

பகுதி நேர ஆசியரியர்கள் மாதம் வெறும் 7,700 ரூபாயைத்தான் தொகுப்பூதியமாகப் பெறுகிறார்கள். இந்த நிலையில், கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் போதும்கூட மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவே இல்லை. இதுகுறித்து முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு இந்த ஆண்டும் இனி வரும் காலங்களிலும் மே மாத ஊதியத்தை வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x