Published : 31 Jul 2020 01:14 PM
Last Updated : 31 Jul 2020 01:14 PM

33-வது முறை அடித்த அதிர்ஷ்டம்: கரோனா வைரஸால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த ஹைதராபாத் மனிதர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மனிதர் கரோனா வைரஸ் காரணமாக 33-வது முறையில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தெலங்கானாவின் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் நூருதீன். 1987-ம் ஆண்டில் இருந்து 10-ம் வகுப்புத் தேர்வை எழுதி வருகிறார். அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற அவரால், ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற முடியவில்லை. எனினும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஆண்டுதோறும் தேர்வுகளை எழுதி வந்தார்.

33-வது முறையாக இந்த ஆண்டும் 10-ம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணத்தையும் செலுத்தி இருந்தார் நூருதீன். எனினும், கரோனா வைரஸ் தொற்றால் தெலங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு நடத்தப்படவில்லை. தேர்வெழுத இருந்த மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்து, உத்தரவிட்டார் மாநில முதல்வர் சந்திர சேகர ராவ்.

இதைத் தொடர்ந்து 33-வது முறையில் 51 வயது நூருதீன் 10-ம் வகுப்பில் முதல் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இது தொடர்பான அவரின் புகைப்படங்கள், 32 ஆண்டுகால ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, ராஜஸ்தானில், ஷிவ் சரண் யாதவ் என்னும் 71 வயது முதியவர், 47 முறை 10-ம் வகுப்புத் தேர்வுகளை எழுதியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x