

பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது விருதுநகர் மாவட்டம்.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654. பள்ளி மாணவ, மாணவிகளாக தேர்வெழுதியோர் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442. இதில், மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 881. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 561. பொது பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 424. தொழில் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 18.
இந்நிலையில், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 96.04%.
தமிழக அளவில் 98.10 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.90 சதவீதத்துடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.
பிளஸ்-1 அரசு பொது தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,318 மாணவர்களும், 12,282 மாணவிகளும் என மொத்தம் 22,600 பேர் எழுதினர்.
இவர்களில் 10,010 மாணவர்களும் 12,116 மாணவிகளும் என மொத்தம் 22,126 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 97.90 சதவீதம்.
கடந்த ஆண்டு 97.41 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7-ம் இடம் பெற்ற விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.