Published : 30 Jul 2020 08:31 PM
Last Updated : 30 Jul 2020 08:31 PM

பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கோப்புப்படம்

சென்னை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

முகக்கவசம் அணிதல், முறையான தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், அன்றில் இருந்தே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

புத்தகங்களை வழங்க வசதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்கெனவே பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x