Last Updated : 29 Jul, 2020 01:01 PM

 

Published : 29 Jul 2020 01:01 PM
Last Updated : 29 Jul 2020 01:01 PM

13 வயதிலேயே 12-ம் வகுப்புத் தேர்ச்சி: சிறுமி சாதனை

இந்தூர்

கரோனாவுக்குத் தந்தையைப் பறிகொடுத்த சிறுமி தன்னுடைய 13-வது வயதில் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி தனிஷ்கா சுஜித். இவர் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தே படித்து வந்தார். 10-ம் வகுப்பை நேரடியாக எழுதிய தனிஷ்கா, தற்போது 12-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவரின் தாய் அனுபா சந்திரன் கூறும்போது, ''சின்ன வயதில் இருந்தே கனிஷ்கா புத்திக் கூர்மையுடன் விளங்கினாள். எல்கேஜி, யுகேஜி படிக்காமல் 3 வயதிலேயே 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டாள். 2015-ம் ஆண்டில் இருந்து வீட்டில் இருந்தே படித்து வருகிறாள்,

முறையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டால், பள்ளியை விடவும் வீடுகளில் குழந்தைகள் நன்றாகப் படிப்பர் என்று அவளின் தந்தை கூறிக்கொண்டே இருந்தார். 10-ம் வகுப்புத் தேர்வைத் தனித்தேர்வராக எழுதிய கனிஷ்கா, தனது 13-வது வயதில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

வணிகவியல் பிரிவில் 62.8% மதிப்பெண்கள் பெற்றதுடன், ஆங்கிலத்திலும் இந்தியிலும் உயர் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

தனிஷ்காவின் தந்தை கரோனா தொற்று காரணமாக ஜூலை 2-ம் தேதி உயிரிழந்தார். போபாலில் ஏராளமான அரசு அதிகாரிகளைச் சந்தித்து, மகளின் தேர்வுக்காகச் சிறப்பு அனுமதி பெற்றோம்'' என்றார்.

சிறுமி தனிஷ்கா கூறும்போது, ''எனக்கு ஐபிஎஸ் ஆக வேண்டுமென விருப்பம். நடனத் துறையில் முனைவர் பட்டம் பெற விரும்புகிறேன். இனி அடுத்ததாக பி.காம். இறுதியாண்டுத் தேர்வை எழுதத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x