Published : 28 Jul 2020 04:51 PM
Last Updated : 28 Jul 2020 04:51 PM

12-ம் வகுப்பு மறுதேர்வு; விடைத்தாள்கள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு; தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு

12-ம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கி, நிறைவடைந்தது.

கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. கரோனா அச்சம் காரணமாகக் கடைசி நாள் தேர்வை 34,482 பேர் எழுதவில்லை.

இவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்தது. ஆனால், அவர்களில் 846 பேர் மட்டுமே மறுதேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். அதில் 175 பேர் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 671 பேர் தனித்தேர்வர்கள்.

இதற்கிடையே பிளஸ் 2 மறுதேர்வு 21 மையங்களில் நேற்று நடந்தது. தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தவர்களில் 327 பேர் வரவில்லை. 519 பேர் மட்டுமே எழுதினர்.

இந்நிலையில், விடைத்தாள்களைத் திருத்தும் பணி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் இன்று (ஜூலை 28) தொடங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான விடைத்தாள்கள்கள் மட்டுமே இருந்ததால் இன்றே விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது.

இதையொட்டி தேர்வு முடிவு நாளை மறுநாள் (ஜூலை 30) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x