Published : 28 Jul 2020 08:07 AM
Last Updated : 28 Jul 2020 08:07 AM

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை

தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கு.சின்னப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் முதுகலை/ முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் (தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல்) முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பு (தமிழ், வரலாறு), முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் 2படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டு முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், 3 ஆண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் இளநிலைப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம்.

முதுகலைத் தமிழ் பயில்வோரில் 20 மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (5 ஆண்டு) பயில்வோரில் 25 மாணவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகையாக தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை இணைய வழியாகவும் நடைபெறுகிறது. மாணவர்கள் www.tamiluniversity.ac.in என்றஇணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை இணைய வழியாக பூர்த்தி செய்து அனுப்பலாம். பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x