Published : 25 Jul 2020 07:26 AM
Last Updated : 25 Jul 2020 07:26 AM
2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி 2 முதல் 11-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் காணொலிகளாக கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து 14 தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் 2 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள பாடங்களை ஆசிரியர்களைக் கொண்டு காணொலிகளாக படப்பதிவு செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விரைவில் அட்டவணை
ஆசிரியர்கள் உருவாக்கித் தரும் காணொலிகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு சரிபார்த்து, தேவையில்லாத அம்சங்களை நீக்கி வருகிறது.
இதையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2 வகுப்புகளுக்கு ஒரு தொலைக்காட்சி என்ற விதத்தில் வாரத்தில் 5 நாட்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT