Published : 21 Jul 2020 07:43 AM
Last Updated : 21 Jul 2020 07:43 AM
சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர நாளை (ஜூலை 22) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2020-21) இந்த இலவசகல்வி திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலைசெய்யும் பெற்றோரின் குழந்தைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல்தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த இலவச கல்வி திட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இதர விவரங்களையும் சென்னைபல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) ஜூலை22 (புதன்கிழமை) முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இணையதளத்தில் தேவையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT