Last Updated : 20 Jul, 2020 04:57 PM

 

Published : 20 Jul 2020 04:57 PM
Last Updated : 20 Jul 2020 04:57 PM

தேசிய திறனறித் தேர்வில் கோவை மலுமிச்சம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

மாணவர்கள் எஸ்.செகீனா, ஆர்.தேசிகா, ஆர்.குணசீலன், கிருஷ்ண ராகவன்.

கோவை

தேசிய திறனறித் தேர்வில் கோவை மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9,10,11,12 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்படும். வறுமை காரணமாக திறமையான மாணவர்கள், தங்களின் பள்ளிக் கல்வியை நிறுத்திவிடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும்.

மாணவர்களின் நுண்ணறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த 2019 டிசம்பரில் தேர்வு நடைபெற்றது.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியானதில், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.தேசிகா, எஸ்.செகீனா, ஆர்.குணசீலன், கிருஷ்ண ராகவன் ஆகிய 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கே.நந்தகுமார், ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x