Last Updated : 18 Jul, 2020 12:06 PM

 

Published : 18 Jul 2020 12:06 PM
Last Updated : 18 Jul 2020 12:06 PM

இளநிலை வேளாண்மை, தோட்டக்கலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவிப்பு

கோவை

இளநிலை வேளாண்மை, தோட்டக்கலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், தமிழகத்தில் 14 உறுப்புக் கல்லூரிகளும் 28 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக். வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய 10 இளநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளின் முதலாமாண்டில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 3,100 இடங்களும் என மொத்தம் 4,700 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெற உள்ளது.

இதற்காக மாணவர்கள் www.tnauonline.in என்ற இணையதளம் வழியாக வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்த கையேட்டை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கைக்கான பதிவு, விண்ணப்பப் பதிவு, தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளைத் தேர்வு செய்தல், சேர்க்கை ஆணை என அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வழியாகவே மேற்கொள்ளப்படும்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களுக்காக மாணவர்களோ அல்லது பெற்றோரோ பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும். 0422-6611322, 0422-6611328, 0422-6611345 ஆகிய தொலைபேசி எண்களில் பல்கலைக்கழக வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x