Published : 17 Jul 2020 03:08 PM
Last Updated : 17 Jul 2020 03:08 PM

உ.பி.யில் 10, 12-ம் வகுப்புப் பாடத்திட்டம் 30% குறைப்பு

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டங்கள் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டான ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் அவை முழுமையான அளவில் கற்பித்தலை நிகழ்த்தவில்லை.

இதனாலும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பாலும், பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அண்மையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ, தனது பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்தது. அதையடுத்து ஹரியானாவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநிலத் துணை முதல்வர் தினேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’உ.பி. அரசு கல்வித் துறையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது. கரோனா காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்புப் பாடங்கள் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 70 சதவீதப் பாடங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதிப் பாடம் ஆன்லைன் மூலமாகவோ, காணொலி வழியாக தூர்தர்ஷன் மூலமாகவோ கற்பிக்கப்படும். இரண்டாவது பகுதி சுயமாகக் கற்பதாக இருக்கும். மூன்றாவது பகுதி செய்முறைக் கற்றலாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x