Last Updated : 17 Jul, 2020 01:58 PM

 

Published : 17 Jul 2020 01:58 PM
Last Updated : 17 Jul 2020 01:58 PM

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு: தெலங்கானா அறிவிப்பு

தெலங்கானாவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஜூலை 6-ம் தேதி தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரண்டும் சேர்ந்த முறையில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறுதிப் பருவத் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டியது அவசியம் என யுஜிசி கூறியது. இதற்கு டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தெலங்கானாவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், கல்வி அமைச்சர் மற்றும் நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி இந்தத் தேர்வுகள் நடைபெறும். மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் எதுவுமின்றி அடுத்த வகுப்புத் தேர்ச்சி செய்யப்படுவர்.

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி முடிவும் விரைவில் எடுக்கப்படும் என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x