Published : 15 Jul 2020 04:43 PM
Last Updated : 15 Jul 2020 04:43 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப 14 தொலைக்காட்சிகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப 14 தொலைக்காட்சிகள் முன்வந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தனியார் பள்ளிகள், தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன. வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்புக் கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தமிழக முதல்வர் நேற்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து விலையில்லாப் பாடப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கடிணி மூலம் காணொலிப் பாடங்களைப் பதிவேற்றிக் கொடுக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 15) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப 14 தொலைக்காட்சிகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ''தொலைக்காட்சியைப் பொறுத்தவரை மாணவர்கள் கல்வி கற்கவும் சந்தேகங்களைக் கேட்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப 14 தொலைக்காட்சிகள் முன்வந்துள்ளன. அட்டவணை தயாரிக்கப்பட்டு, 3 நாட்களுக்குப் பிறகு பட்டியல் வெளியிடப்படும். அதில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புகளை நடத்த வேண்டி இருக்கும். இதற்கான ஏற்பாடுகள் முதல்வர் ஆணையின்படி தொடங்கி, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் 6,019 அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணைய வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களிடம் உள்ள மடிக்கணினியைக் கொண்டு வந்து, தேவையான பாடங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செல்போன் மட்டும் வைத்துள்ள மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x