Published : 14 Jul 2020 02:04 PM
Last Updated : 14 Jul 2020 02:04 PM

கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் மாற்றம்: ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேந்திரிய வித்யாலயா சங்கதன் 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து புதிய விதிமுறைகளை kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ''2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடமும் ஒதுக்கப்படும். அத்துடன் 3 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கே.வி. பள்ளிகளில் ஆன்லைன் குலுக்கல் முறையில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் 2 முதல் 8-ம் வகுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை இருக்கும். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்தால், குலுக்கல் முறையில் தெரிவு இருக்கும்.

9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் 11-ம் வகுப்புக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்.

கே.வி.யில் மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் சேர்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவர் சேர்க்கைப் பட்டியல் வெளியாகும்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், கே.வி. பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x