Published : 14 Jul 2020 01:08 PM
Last Updated : 14 Jul 2020 01:08 PM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன. எனினும் கரோனா தொற்று காரணமாக தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. அதே நேரத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகளும் முழுமையாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்து முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே யாரும் எதிர்பாராத விதமாக 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் ஒட்டுமொத்தமாக 88.78% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x