Published : 13 Jul 2020 07:12 AM
Last Updated : 13 Jul 2020 07:12 AM

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்க வழிகாட்டு முறைகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்கட்டமாக பிளஸ் 2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.புத்தகங்களை வழங்கும்போதுபின்பற்ற வேண்டிய பாதுகாப்புநடைமுறைகள் குறித்து தமிழகஅரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2, 10-ம்வகுப்பு மாணவர்கள், ஊடரங்குகாலத்தில் வீட்டில் இருந்தபடி படிக்க வசதியாக நடப்பு கல்விஆண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்களையும், வீடியோ பதிவு பாடங்களையும் (வீடியோ லெக்சர்) வழங்க முடிவு செய்துள்ளது. அவற்றை விநியோகிக்கும்போது பின்வரும் நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

பள்ளியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். ஒருநேரத்தில் அதிகபட்சம் 20 பேர்களை அனுமதிக்கலாம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதியைச்சேர்ந்தவர்கள், நோய்த் தொற்றுதனிமைப்படுத்தலில் இருப்பவர் கள், கட்டுப்பாட்டு பகுதிகள் இயல்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட பின்னரும், அதேபோல், தனிமைப்படுத்தல் காலம் முடிந்தபின்னரும் பள்ளிக்கு வந்து பாடப்புத்தகங்களை பெறலாம்.

பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தரையில் இடைவெளிவிட்டு சதுர வடிவில் கட்டம் இட வேண்டும்.

பாடப் புத்தகங்கள் வாங்க வரும் மாணவர்களும், பெற்றோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்களின் மடிக்கணினியில் பாட வீடியோக்களை பதிவுசெய்து கொடுக்கும்போது கணினி ஆய்வகத்துக்குள் மாணவர்களையும், பெற்றோரையும் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மடிக்கணினியிலும் மாணவரின் பெயரை ஒட்டச்செய்து அவற்றை பள்ளி அலுவலக ஊழியர் மொத்தமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாடப் புத்தகங்கள் வழங்கும்பணியாளர்களும், மடிக்கணினியைக் கையாளும் ஊழியர்களும் கண்டிப்பாக கையுறை அணிந்திருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வதற்கு முன், பள்ளி வளாகம், வகுப்பறை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை கிருமிநாசினியால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்.

பள்ளியின் நுழைவு வாயிலும் வெளியே செல்லும் வழியிலும் மாணவர்களும், பெற்றோரும் கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி, சோப்பு நீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் விநியோகத்தின்போது மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் தலைமைஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x