Published : 11 Jul 2020 02:46 PM
Last Updated : 11 Jul 2020 02:46 PM
உலகளாவிய அளவில் நம் மாணவர்களை ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
கல்லூரித் தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஜூலை 6-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை, செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கல்லூரித் தேர்வுகளை நடத்த முடியாது என்றுகூறி எதிர்ப்பைப் பதிவு செய்தன. எதிர்க்கட்சிகளும் அவற்றின் மாணவர் சங்கங்களும் தேர்வுகள் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் உலகளாவிய அளவில் நம் மாணவர்களை ஏற்றுக் கொள்வதற்குத் தேர்வுகள் அவசியம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் வருங்கால வளர்ச்சியும் முக்கியம்.
எந்தவொரு கல்வி முறையிலும் மாணவர்களைக் கற்றல் மதிப்பீடு செய்வதே முக்கியமான மைல்கல்லாக அமையும். தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனே அவர்களுக்குத் திருப்தியையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். இதுவே மாணவர்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பிரதிபலிப்பாகும். இது உலகளாவிய அளவில் நம் மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு அவசியமானது.
பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT