Published : 07 Jul 2020 07:45 PM
Last Updated : 07 Jul 2020 07:45 PM

செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

செப்டம்பர் மாதத்துக்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்கள் முடிவு எடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த வழிகாட்டுதல்களை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் வருங்கால வளர்ச்சியும் முக்கியம். இதை முன்னிட்டு பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம்.

* இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.

* அரியர் வைத்துள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

* இறுதியாண்டு மாணவர்களால், செமஸ்டர் தேர்வை எழுத முடியாத பட்சத்தில், அவர்களுக்குத் தனியாகச் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கு இந்த ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.

* மற்ற ஆண்டு மாணவர்களுக்கு முந்தைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உள் அக மதிப்பீட்டு முறையின்படி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

* கல்வி நிறுவனங்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x