Published : 07 Jul 2020 05:03 PM
Last Updated : 07 Jul 2020 05:03 PM
வேலைவாய்ப்பு, படிப்பின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு எம்சிஏ படிப்பின் காலத்தை 2 ஆண்டுகளாகக் குறைத்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி முதுநிலைக் கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பை, இளநிலைக் கணினி பயன்பாடுகள் (பிசிஏ) படித்தவர்கள் மட்டும் 2 ஆண்டுகள் படித்தால் போதுமானது. அதேநேரம் இதர இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
எம்சிஏ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதால் எம்சிஏ சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைத் தவிர்த்து சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் எம்சிஏ படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாகக் குறைக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு (ஏஐசிடிஇ) கோரிக்கை அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக் கடந்த பிப்ரவரி மாதம் ஏஐசிடிஇ, எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகளாகக் குறைத்தது.
இந்நிலையில் தற்போது இதற்கான அரசாணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, படிப்பில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT