Published : 06 Jul 2020 08:24 PM
Last Updated : 06 Jul 2020 08:24 PM

கேரளாவில் மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: பினராயி விஜயன் உறுதி

கேரளாவில் மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் KEAM எனப்படும் கேரள பொறியியல், கட்டிடவியல், மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். கோவிட் பரவலை ஒட்டி, ஏப்ரல் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வு ஜூலை 16-ம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு காலையிலும் கணக்குப் பாடத்துக்கான நுழைவுத்தேர்வு பிற்பகலிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட் பரவல் கட்டுக்குள் இருந்த கேரள மாநிலத்திலும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ’’மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடக்கும், தேர்வுத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x