Published : 06 Jul 2020 05:47 PM
Last Updated : 06 Jul 2020 05:47 PM
தினந்தோறும் 24 கி.மீ. சைக்கிளிலேயே பள்ளிக்குச் சென்று வந்த மத்தியப் பிரதேச மாணவி, தனது 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 98.75% பெற்று சாதனை படைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சம்பல் நகரத்தில் உள்ள அஜ்னோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ரோஷினி பதாரியா. தனது கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை தனது கிராமத்திலேயே படித்தவர், 9-ம் வகுப்புக்குத் தொலைவில் உள்ள பள்ளியில் சேர நேர்ந்தது.
சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் அஜ்னோல் கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே தினமும் பள்ளிக்குச் சென்றார் ரோஷினி. இதுகுறித்துப் பேசும் அவர், ஆண்டுக்கு சுமார் 60 நாட்கள் சைக்கிளிலேயே பயணித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
சில நாட்கள் மிகவும் சோர்வாக இருக்கும். அதையும் மீறி தினந்தோறும் நான்கரை மணி நேரம் படிப்பேன். தற்போது மாநிலத்திலேயே 8-வது இடத்தைப் பிடித்துள்ளேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் படிப்புக்குப் பயிற்சி பெறத் திட்டமிட்டுள்ளேன் என்றார் ரோஷினி.
''அஜ்னோல் கிராமத்திலேயே ரோஷினிதான் முதல் முறையாக பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்'' என்கிறார் ரோஷினியின் தந்தை.
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் யாராலும் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணமாகி நிற்கிறார் ரோஷினி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT