Published : 03 Jul 2020 08:07 PM
Last Updated : 03 Jul 2020 08:07 PM

நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதியில் இருந்து ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற இருந்தது.

சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கும் 9 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பித்திருந்தனர். இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்தது. இதுகுறித்து, நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையிடம் (என்டிஏ) தேர்வை நடத்துவது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை கேட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுசெப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்யும் நோக்கில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x