Published : 02 Jul 2020 04:33 PM
Last Updated : 02 Jul 2020 04:33 PM

நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்க மத்திய அரசு பரிசீலனை: தேசியத் தேர்வுகள் முகமையிடம் ஆலோசனை கேட்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்டிஏவிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்தது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கும் 9 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் #PostponeneetJee, #NoExamsInCovid, #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையிடம் (என்டிஏ) தேர்வு குறித்து ஆலோசனை கேட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ''தற்போதைய சூழல் மற்றும் மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது குறித்து என்டிஏ மற்றும் பிற நிபுணர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. நாளை அவர்கள் இது தொடர்பான பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிப்பர்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x