Published : 02 Jul 2020 12:03 PM
Last Updated : 02 Jul 2020 12:03 PM

ஊழியர்களின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய முறை: பள்ளிக் கல்வித்துறை 

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''புதிய மென்பொருளான 'ஐஎப்எச்ஆர்எம்எஸ்' மூலம் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சம்பளப் பட்டியலைத் தயாரித்து அரசுக் கருவூலத்திடம் சமர்ப்பிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதத்தின் ஊதியப் பட்டியல் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த முறையில் தருமபுரி, பெரம்பலூா், நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பட்டியல் தயாரிக்கக் கருவூலத் துறை திட்டமிட்டுள்ளது. எனவே, முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில் பதிவு செய்து ஜூலை மாத ஊதியப் பட்டியலை கருவூலங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாவட்டம் சார்ந்த கருவூலகத்தை அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x