Published : 01 Jul 2020 06:23 PM
Last Updated : 01 Jul 2020 06:23 PM

பள்ளிகளைத் திறக்க நீண்ட காலம் ஆகலாம்; 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் ஆலோசனைப்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இப்போது எதுவும் கூற முடியாது. 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்கள் உள்ளன.

12-ம் வகுப்பு இறுதித் தேர்வை சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் தேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்க முடியும். முதல்வரின் ஆலோசனைப்படி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

பாடப் புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து நம்மால் இப்போது யோசிக்க முடியாது.

நிலைமை சரியானபிறகு, முதல்வரின் தலைமையில் மருத்துவக் குழு, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித்துறை ஒன்றுகூடிக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதனால் பள்ளிகள் திறப்புக்கு நீண்ட காலம் ஆகலாம்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x