Published : 01 Jul 2020 04:17 PM
Last Updated : 01 Jul 2020 04:17 PM

95% பார்வைக் குறைபாட்டுடன் உதவியாளர் இன்றி தேர்வெழுதிய மாணவர் கரீம்: அபார மதிப்பெண்கள் பெற்று அசத்தல் 

பார்வைக் குறைபாட்டுடன் இருந்தாலும் உதவியாளர் உதவியில்லாமல் மாணவர் கரீம் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி அசத்தியுள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஹரூன் கரீம். இவர் மலப்புரத்தின் மன்கடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவருகிறார். 95% பார்வைக் குறைபாட்டுடன் உள்ள இவர், உதவியாளர் இன்றி பொதுத் தேர்வெழுத முடிவெடுத்தார்.

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் கணிப்பொறியின் உதவியுடன் தேர்வெழுதினார். இவருக்காக கேரள பள்ளிக் கல்வித்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. இதுகுறித்துப் பேசிய கரீம், ‘‘நான் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணான A+ பெற்றுள்ளேன்.

இனி யாரையும் சார்ந்து நான் தேர்வு எழுத வேண்டியதில்லை. இதைச் சாத்தியப்படுத்திய தொழில்நுட்பத்துக்கு நன்றி. நான் எதிர்காலத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிக்க ஆசைப்படுகிறேன்’’ என்றார் மாணவர் கரீம்.

மகனின் சாதனை குறித்துத் தந்தை அப்துல் கரீம் கூறும்போது, ‘‘தேர்வின்போது உதவியாளர் யாருமின்றிக் கணிப்பொறியின் உதவியுடன் கரீம் தேர்வெழுதக் கோரியிருந்தோம். கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத்தின் உதவியால் இது சாத்தியமானது’’ என்றார்.

கேரள வரலாற்றில், உடன் உதவியாளர் யாருமில்லாமல் பார்வைக் குறைபாடுடைய மாணவர் தேர்வெழுதியது இதுவே முதல் முறையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x