Last Updated : 30 Jun, 2020 04:19 PM

 

Published : 30 Jun 2020 04:19 PM
Last Updated : 30 Jun 2020 04:19 PM

தேர்வு ரத்தானாலும் கட்டணம் செலுத்தினால்தான் மதிப்பீடு: தள்ளுபடி இல்லை என புதுச்சேரி பல்கலை. அறிவிப்பு

புதுச்சேரி

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக் கட்டணம் செலுத்தினால்தான் மதிப்பீடு செய்யப்படும். தேர்வுக் கட்டணத் தள்ளுபடி இல்லை என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கரோனாவால் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. உள் அகமதிப்பீட்டு முறை மூலம் மதிப்பெண்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் நடத்தப்படாத தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், புதுச்சேரி அரசிடமும் புகார் தெரிவித்திருந்தனர்.

தேர்வுக் கட்டணம் வசூலானாலும் அடுத்த செமஸ்டரில் அது இணைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
.
இச்சூழலில் புதுச்சேரி பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி லாசர், செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக் கட்டணம் செலுத்தினால்தான் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''மாணவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்தல், தேர்வுக் கட்டணம் செலுத்துதல், குறைந்தபட்ச வருகை ஆகிய அனைத்தும் தேர்வுக்கான உள் மதிப்பீடாகும். தேர்வுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்து கட்டணத்தைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாணவ, மாணவிகள் கூறுகையில், "தேர்வைக் கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு ஊதியம், விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட எவ்வித செலவும் இல்லாத சூழலில் தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூல் செய்யப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்தினால்தான் உள்மதிப்பீடு நடக்கும் என்பது எச்சரிப்பது போல் உள்ளது. புதுச்சேரி அரசு இவ்விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x