Published : 30 Jun 2020 03:12 PM
Last Updated : 30 Jun 2020 03:12 PM
கரோனா சூழலுக்கு இடையில் கேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்த நிலையில், கேரளாவில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு கேரளாவில் 4,22,450 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 41,906 மாணவர்கள் அதிகபட்ச கிரேடு மதிப்பெண்ணான A+ -ஐப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 4,500 மாணவர்கள் இம்முறை A+ கிரேடைப் பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,736 மாணவர்கள் A+ கிரேடைப் பெற்றுள்ளனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த 10-ம் வகுப்புத் தேர்வுகள் கோவிட் பரவலால் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மே 26 முதல் 28-ம் தேதி வரை மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்பட்டன.
கேரளாவில் 9 புள்ளி கிரேடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச கிரேடு மதிப்பெண் 9, குறைந்தபட்சம் 1 ஆகும். அவை முறையே A+, A, B+, B, C+, C, D+, D, E என்பன ஆகும். இதில் D, E கிரேடு பெறுபவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டியது அவசியம்.
தேர்வு முடிவுகளை keralapareekshabhavan.in, sslcexam.kerala.gov.in, results.kite.kerala.gov.in, results.kerala.nic.in மற்றும் prd.kerala.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம்.
இந்தியாவிலேயே கேரளாவில் மட்டும்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT